வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
2 comments:
இனிய தோழர் பாக்கியராஜ்... வணக்கம். நெஞ்சம் தொட்ட எழுத்துக்கள். ஏக்கம் மிகுந்திருக்கிறது. தூக்கம் கலைந்திருக்கிறது. தொலைத்து விடாமல் இந்த எழுத்தை.... இனிய தமிழைப் பற்றிக் கொள்ளுங்கள். கடல் கடந்தவனுக்கும், ஊர் விட்டு வெளியேறிவனுக்கும் அவனை ஆசுவாசப் படுத்துவது... என் அன்னைத் தமிழும்.., இந்த மண்ணின் நினைப்பும்.., நம் வாழ்வின் மீதான காதலும்தான். உங்களை முதன் முறையாய் சந்திக்கிறேன். மகிழ்ச்சி. நல்ல கவிதைக்கு நன்றி. தொடருங்கள். வாழ்த்துக்கள். வருகை தந்து போங்கள்.... ( ithayasaaral.blogspot.com )
Really a fantastic one. Keep this gud job.
Rgds,
R.Ilavenil
Post a Comment