அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

வெற்றிக்கு ஆறு படிகள்

நூற்றாண்டுகள், நூற்றாண்டுகளாக "மைதாசின் மாயக்கை" படைத்த, வெல்லவே முடியாத, எண்ணற்ற தடைகளைத் தகர்த்தெறிந்து இமயத்தை வென்ற எண்ணிலா மனிதர்கள் சுட்டி க்காட்டும் வரலாறை நாம் மறுக்க இயலுமா, மறைக்கத்தான் முடியும? ஒரு சிலருக்கு, அவர்களின் மகத்தான வெற்றி குருட்டு அதிர்ஷ்டத்தின் பயனாகத் தெரியலாம். மற்றும் சிலருக்கு அது அவர்களுடைய கடும் உழைப்பின் பரிசாகவும் தென்படலாம். ஆனாலோ, ஆண்ட்ரூ கார்னகி,, ஹென்ரி ஃபோர்டு ஆகியோரின் வியப்பூட்டும் வெற்றிகளின் பின்னே ஒளிந்துள்ள உண்மை மிகவும் சுவையானது என்பதை மறுக்கவே முடியாது!
ஒவ்வொரு மனிதனும் அடைய அவாவுறும்ஒரு உயர்ந்த நிலைதான் வெற்றி என்பது. கணக்கற்ற பலர்போல, சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வழிகளை நீங்களே திறக்க முடியும். எப்படி என்று பார்க்கலாமா?

வெற்றிப்படி-1: அவா அல்லது ஆசை.
எந்த ஒரு இலக்கையும் அடையும் நடவடிக்கைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் நமது இலக்கை அடைய எண்ணும் ஆசைக்கு நமது மனம் எவ்வாறு பதில் குரல் கொடுக்கிறது என்பதுதான். விறுப்பும், வெறுப்பும், வேண்டியும், வேண்டாமலும், தொட்டும், தொடாமலும் ஆன மனநிலையும் எண்ணமும் தோன்றினாலோ, வெளிப்பட்டாலோ, உள்ளத்தின் ஊக்கத்தின் அளவு குறைந்து, தோல்வியோ, அல்லது, பாதி வெற்றியோதான் எ ய்த முடியும்.
ஒரு இலக்கை அடையவேண்டும் என்றால், நமது திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, வெற்றியெனும் இலக்கை எட்டும்வரை முழுமூச்சான எண்ணமும், உத்வேகமும், திட சித்தமும் கொள்ளவேண்டும். ஆசை அல்லது அவாதான் இந்தத்திட மனநிலையை உருவாக்கும்.
இந்த ஆசையெனும் விசைதான் மனிதகுலத்தை ஒவ்வொரு நிமிடமும் புதிய அறிவைப் பெறவேண்டுமென்ற ஆற்றொணாத் தாகத்திற்கு ஆளாக்கி, அறிவியலின் எல்லா எல்லைகளையும் தாண்டி, நம்பவே முடியாத, என்றுமே எதிர்பார்க்கவே முடியாத அளவு உயர்ந்த இலக்கை அடையவைத்துள்ளது என்றால் மிகையாகுமோ?

இந்த அவாவெனும் விசையை உருவாக்கி, வளர்ப்பது ஒன்றும் இமயமலையில் ஏறுவதுபோல் கடுமையானதும் அல்ல, இயலாததும் அல்ல. நாம் செய்யவேண்டியது எல்லாம், நமக்கு வேண்டியதை நோக்கி, நம் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருப்பதுதான், இடைவிடாமலும், எந்த இடையூறுகளுக்கிடையிலம். எளிதாகச் சொன்னால், இவ்வளவுதான்! நிற்காதே! நிற்காதே! ஓடு! ஓடு! ஓடிக்கொண்டேயிரு, நிற்கவே நிற்காத குதிரையைப்போ ல்! குறைந்தபட்சம் நடந்துகொண்டேயாவது இரு. ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதே! "நீ விட்டுவிட்டு நிற்கும்வரை, நீ தோல்வி அடைவதில்லை" என்ற மகத்தான பொன்மொழியை மறக்க முடியுமா! "நாம் எதையெல்லாம் மிக்க ஆர்வத்துடனும், இடைவிடாமலும் அடைய ஆசைப்படுகிறோமோ, அவையெல்லாவற்றையும் அடைவோம், எய்துவோம்", என்ற நெப்போலியனின் ொன்மொழியை மறக்கத்தான் முடியுமா!

வெற்றிப்படி - 2: இலக்கு
கடும் முயற்சிக்குப் பின்பும்கூட, பெரும்பாலோர் திருப்திகரமான முடிவுகளைப் பெற இயலாதுபோவதன் முதற்காரணம் என்னவென்றால், அவர்கள், தாங்கள் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதையே தெரிந்து கொள்வதில்லை. உங்களுடைய இலட்சியம் வெள்ளோட்டமாகவோ, அரைகுறையாகவோ இருக்கக் கூடாது. உங்களுடைய இலக்கை அடைவதற்கு முன்பு, அந்த இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தவிதத்தில், எவ்வாறெல்லாம் மாறுபடும், வேறுபடும் என்பதை முன்கூட்டியே உணரவேண்டும், யோசிக்க வேண்டும். நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் துல்லியமாகத் திட்டவட்டமாக, உள்ளங்கை நெல்லிக்கனிபோல, சந்தேகமே இல்லாமல் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடைகள் கட்டாயம் வேண்டும்: இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தமுறையில் இப்போது இருப்பதிலிருந்து வேறுபடும்? முன்னேறுமா, மாறுபடுமா? இலக்கை அடைந்தபின் நாம் எவ்வாறு உணர்வோம்? நமது நோக்கு எவ்வாறு மாறுபடும்? எந்தவிதமானச் சந்தர்ப்பங்களில், நிலைகளில் நாம் நிற்போம், ஆட்படுவோம்? நீங்கள் இலக்கை எட்டியபின், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு உங்களால் பாதிக்கப் படுவர்? அவர் எவ்வாறு எதிர்ச்செயல்படுவர்? நீங்கள் இலக்கை எய்துவது என்றால் என்ன, என்ற தெளிவான, முடிவான, சித்திரம் உங்கள் மனத்திரையில் விரிக்கப்பட வேண்டும்.

வெற்றிப்படி - 3: நம்பிக்கை
நம்பிக்கையினால்தான் ஆசை பிறக்கிறது. யாரேனும் மறுக்க முடியுமா?
ஆசையும், நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்றால் மிகையாகாதன்றோ! இந்த நம்பிக்கைதான், ஊக்கம் எனும் நெருப்பை அணையாமல் எரியவிட்டுக் காத்து ஒளிர வைத்து நம்மை, நமது இலக்கை நெருங்கச் செய்கிறது. நம்பிக்கை என்பது மலைகளையெல்லாம் அசைக்கவும், இளக்கவும் உடைக்கவும் செய்யும். வெற்றியைக் கொன்று குவிக்கும் எதிரிகளான, தேவையில்லாத பயம், நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளுதல், அநாவசியமான கவலை, துக்கம், சுயமரியாதைக் குறைவு ஆகிய வற்றையெல்லாம் உருக்கி, இளக்கி, அசைத்துக் கரைக்கவல்லது நம்பிக்கைதான்இலக்கை நமது மனதில் திடமாக அமைத்தபின்னர், இந்த அவா விசையானது கடக்கவே முடியாதவைபோல் தோற்றம் கொடுக்கும் தடைகளை நோக்கி நம்மை விசிறி எறியும். நாம் நமக்கு விருப்பமான வெற்றி முடிவை அடைவோம் என்ற அசைக்கவே முடியாத நம்பிக்கை நம்மை வெற்றியை நோக்கியே உந்தித் தள்ளும். இந்தத் திட நிலையைப் பிரதிபலிக்க மனத்தை இயக்கிவிட்டால், ஆச்சரியகரமான மாற்றங்களும், வெற்றியின் அடையாள ங்களும் தோன்ற ஆரம்பிக்கும். நம்பிக்கையின் அபரிமிதமான சக்தியையும், அதன் ஆச்சரியகரமான வெற்றிகளையும குறித்து பலரும் சான்றளித்தாலும், இன்னும் பலபேர்க்கு, பரிபூரணமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தபோதிலும், மலையளவு எதிர்ப்புகள் வருங்காலல் லாபகரமான முடிவுகள் வருமா, கிட்டுமா, என்ற சந்தேகம்தான்! வரும் தடைகள் உளவியலான தாகவோ, உடல்நிலையை ஒட்டியதாகவோ இருந்தாலும்,

"எதுவும் சரியான வழியில் செல்வதில்லை, எல்லாமே தவறாகிவிட்டன" என்ற ஒரே ஒரு தவறான எண்ணக்கீற்று மாத்திரம், இமயத்தையே வெல்லும் மனவுறுதி கொண்டவரையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடும் ஒருநொடியிலேயே! ஆனால் இதே இந்தச் சந்தர்ப்பங்களிலும், நிலைகளிலும்தான் நம்பிக்கையும், விசுவாசமும் மகத்தான வெற்றி விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணரவேண்டும் என்பது உண்மை. உங்கள் மேல் நம்பிக்கை, உங்கள் செயலில் நம்பிக்கை, செயலை நிச்சயமாகச் செய்து முடிப்போம் என்ற விசுவாசமும், நம்பிக்கையுமே வாழ்வின் வெற்றுக்கு உறுதுணை!

ஒரு சிலர் உண்டு - "ஆமாம்! சொல்லுவது எளிது, செய்வது கடினம்" என்று தனக்குத்தானே குறைபடடுக் கொண்டு, உளவலிமையிலா திருப்பவர்கள். இந்த மனப்போக்குதான் எல்லாத் துன்பங்களையும் சிரஞ்சீவியாக வாழவைத்து உங்களையே அழிக்கும் முதல் எதிரியாகும். நம்பிக்கை வேண்டும் என்பதில் விசுவாசமாக இருங்கள். நீங்கள் தாங்களாகவே நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
ஒரு காகிதத்தில் உங்களது இலக்குகளையெல்லாம் அழகாக எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலையும் எழுந்தவுடனும், இரவு உறங்கப்போகு முன்னரும் "இதை நான் செய்து முடிக்க வேண்டும்" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் படியுங்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். "காலப் போக்கில், விரைவில் நாம் வெற்றி பெறுவோம்" என்று உங்களுக்கே, நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அன்றாட மற்ற வேலைகளில் ஈடுபடும்போதுகூட, உங்கள் இலக்குகளை அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள், "வெற்றி பெறுவேன்" என்று நினையுங்கள். இப்படிச் சொல்வது உங்கள் மனதை நீங்களே எமாற்றுவதாக ஆரம்பத்தில் எண்ணலாம். அனால், போகப்போக ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதைக் காண்பீர்கள்.

வெற்றிப்படி - 4:  திட்டம்.
நம்பிக்கை எனும் கரும்பாறையானக கட்டமைப்பின் மீது இலக்கை நிர்ணயித்துவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும், அதன் வெற்றிக்கும், இடம், பொருள், ஏவல் என்ற மூன்றும் இன்றியமையாதவை. செய்யும் இடம் முதல் தேவை. செய்வதற்குச் சிலரது உதவி தேவைப்பட்டால், அவர் யார் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கு, எண்ணம், செயல் ஆகியவற்றின் துல்லியமான வரைபடம் வரையுங்கள். அதன்படி செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!

ஆனால் ஒன்று! உங்களுடைய திட்டம் சரிவர வேலை செய்யுமா, உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்குமா, என்பதை ஆராயவேண்டும். வரைந்த திட்டம் கற்பாறையாக இல்லாமல், மாறுதல்களை ஏற்றுக் கொள்பவையாகவும் இருக்கவேண்டும். ஆனால் ஒரு எச்சரிக்கை! தீர ஆலோசித்துத் தீட்டிய திட்டத்தில், பின்னர் மாறுதல்களை உட்படுத்துவதற்கு முன்பு, அந்த மாறுதல்கள் தேவைதானா, காலப்போக்கில் நீடித்து நிற்குமா, என்று தீர யோசனை செய்தபின்தான் அந்த மாறுதல்களைத் திட்டத்தில் புகுத்தவேண்டும்.
எதோ ஒன்று செய்து, ஏதோ ஒரு இலக்கில் முடிவடைவதையும் சிலநேரம் தவிர்க்க முடியாது. எதிர்பார்த்த வெற்றி விரைவிலேயே கிடைத்துவிடலாம், தாமதமும் ஆகலாம். "சங்கிலித் தொடர் நிகழ்ச்சி" அல்லது "வண்ணத்துப் பூச்சி நிகழ்வு" என்பது இதற்குப் பெயர். இங்கும், அங்குமாக திட்டத்தில் நீங்கள் செய்த மாறுதல்கள், ஆச்சரியகரமான மேல்விளைவுகளையும் ஏற்படுத்தி, அதிசயப்படும் அளவு வெற்றியைக் கொடுப்பதும் உண்டு. தோல்வியையும் சிலநேரம் தழுவவேண்டியச் சங்கடமான நிலைமையும் சிலசமயம் ஏற்படலாம். எதற்கும் துணிந்து, தயாராக இருக்கவேண்டும்.

வெற்றிப்படி - 5: உருவகப்படுத்துதல்.
உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது என்பதுதான் இது. "மனக்கோட்டை" என்றுகூடச் சொல்லலாம். நாம் இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணி மனதில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உள்ள எழுச்சிக்கு மிகவும் ஏதுவானது. இது ஒரு மிகச்சிறந்த பயனைக் கொடுக்கவல்லது. இது உங்களது அவாவிற்கும், விடாமுயற்சிக்கும் மணிமகுடம் சூட்டவல்லது, எனெனில், இதன்மூலம் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்துவிட்டதாகவே உள்ளம் எண்ணி , மகிழ்ந்து அமைதியுறுகிறது.

மனத்தளவில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி, மேலும் என்னவெல்லாம் நன்மைகளைக் கொடுக்கிறது? முழு மன நிம்மதி, ஒரு நோக்கம் முடிவடைந்துவிட்டதென்று. அக்கம்பக்கத்தில் உள்ள மற்றவர்களும் நம்மைப் பாராட்டுவதை நாம் உளத்தளவில், மானசீகமாக உணர்கிறோம். இதுவே நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்து, நம் அவா-விசையை உந்தித்தள்ளி, நம் நம்பிக்கையைப் பலப்படுத்தி நம்மை நம் இலக்கை நோக்கி முன்னேற வைக்கிறது. அதிசயம், ஆனால் உண்மை!

வெற்றிப்படி - 6: ஆழ்மன சக்தி
ஆழ்மனதின் அடிவாரத்திலிருந்துதான் தோல்வி அல்லது வெற்றிச் செடியின் விதை முளைக்கிறது. ஒவ்வொருவரின் சுயபிம்பம ஆழ்மனதிலிருந்துதான் வெளிப்படுகிறது. "இவன் இப்படிப் பட்டவன்தான், ஐயா, இவன் மாறவே மாட்டான்" என்கிறார்களே, அதுதான் இது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த சுய பிம்பம் எளிதாக மாற்றப்படக் கூடியது. இந்தக் கட்டுரையைச் சரியாகவும், முறையாகவும் படித்துக் கூறப்பட்டக் கருத்துகளைச் செயல்படுத்தினால் எந்த ஒரு சுபாவத்தையும், உள்ள நிலையையும் எளிதில் மாற்றிவிடலாம். திறந்த மனப்பான்மையையும் உருவகப் படுத்தும் வழிமுறையையும் மேற்கொண்டு இந்தப் பயன்பெறலாம்.
ஆண்ட்ரூ கார்னகி தன் தொழிலைத் துவங்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, துறையிலோ ஆழ்ந்த திறமையில்லாதவராகவும், சாதாரணமான ஒரு மனிதராகவும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தன் கடும் உழைப்பாலும், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளாலும், பலனடைந்து, பல மில்லியன்களை ஈட்டி எல்லோருக்கும் அவர் கொடுத்தார் என்பது இன்றைய அழிக்கவே முடியாத வரலாறு! கார்னகியின் தத்துவம் இன்றும் அமரத்துவம் வாய்ந்து சிரஞ்சீவியாக வாழ்வதை ஆயிரக்கணக்கில் கிடைக்கும் கார்னகியின் வெற்றிப் புத்தகக் குவியல்கள் நிலைநாட்டுகின்றன!
மேற்குறிப்பிட்ட ஆறு படிகளை வாழ்வில் நுட்பமாகப் பயன்படுத்தினால் இயலாத செயல் என்பது எதுவுமே இருக்காது!

2 comments:

THOPPITHOPPI December 14, 2010 at 8:29 PM  

நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்

arasan December 14, 2010 at 9:47 PM  

அருமையான பதிவு .. வாழ்த்துக்கள்

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG